×

மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் ஐடி ஊழியர் கைது

திருப்போரூர்: நாவலூர் அருகே மனைவி, குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற ஐடி ஊழியரை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்த அரவிந்த் (32). இவர் ஐடி படிப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது, தன்னுடன் வேலை பார்த்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல் பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் – ராஜலட்சுமி தம்பதியரின் மகள் சுஜிதா (32) என்பவரை காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு ஐஸ்வர்யா (7) என்ற மகள் இருந்தார். இந்நிலையில், கடன் தொல்லை காரணமாக தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து மனைவியின் கை நரம்பை அறுத்து கொலை செய்த அரவிந்த தானும் மயக்க மாத்திரைஅருந்தி கை நரம்பை அறுத்துக் கொண்டார். இந்நிலையில் மயக்க நிலையில் அரவிந்த் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட அவரது மனைவி சுஜிதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்த நேற்று தாழம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அரவிந்தை போலீசார் மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் ஐடி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Nawalur ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி